கிரேண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ! வௌியான தகவல் !


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த சுனிதாவும் அவரது உதவியாளருமே நேற்று (25) பிற்பகல் கிரேண்ட்பாஸ், வடுல்லவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 5.50 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டிருந்தனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்ணொருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த பெண்ணும் முச்சக்கரவண்டியின் சாரதியும் படுகாயங்களுக்குள்ளாகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் பின்னர் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) அதிகாலை உயிரிழந்துள்ளார்.

கே. சுனிதா அல்லது கிராண்ட்பாஸ் குடு சுனிதா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் மீது ஐந்து துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவர் அப்பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும், யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து தலைமறைவாகியிருந்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர் மீது போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவருடன் கொல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியான, 31 வயதான கம்புருபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த கே.ஆர். தர்சன என்ற நபர் கொல்லப்பட்ட பெண்ணின் உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.

போதைப்பொருள் கடத்தலில் அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார்.

இதேவேளை, துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று காலை ஹொருகொடவத்த பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் வியாபாரிகளை காட்டிக் கொடுத்தமை மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு இடையூறு விளைவித்ததற்காக உள்ளூர் போதைப்பொருள் வியாபாரிகள் அவர் மீது கோபம் கொண்டு இந்த கொலையை முன்னெடுத்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

ரிவோல்வர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.