பெருந்தொகையான மஞ்சளுடன் 5பேர் கைது !


கற்பிட்டி - பள்ளிவாசல்துறை பகுதியில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு வீடொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான மஞ்சள் நேற்று (25) கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கற்பிட்டி பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐவரும் 35 இற்கும் 42 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனவும் இவர்கள் பள்ளிவாசல்துறை மற்றும் குறிஞ்சிப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

கற்பிட்டி பொலிஸ் விசேட பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் பள்ளிவாசல்துறை கிராம சேவகர் பிரிவுக்குற்பட்ட வெள்ளங்கரை பிரதேசத்தில் கற்பிட்டி பொலிஸாருடன் இணைந்து பொலிஸ் விசேட பிரிவு உத்தியோகக்கர்கள் விசேட சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது, வீடொன்றில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்டு சூட்சுமமான முறையில் 20 மூடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 860 கிலோ 250 கிராம் மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மஞ்சளின் பெறுமதி சுமார் 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது எனவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஐவரும் இன்றைய தினம் (26) புத்தளம் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது, சந்தேக நபர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.