அரச சேவை அதிகாரிகளுக்கு புதிய நற்செய்தி: 25,000 ரூபாய் விசேட மாதாந்தக் கொடுப்பனவு !


அரச சேவையின் நிர்வாக சேவைப் பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபாய் விசேட மாதாந்தக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதுவரை காலச் சேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவிற்குப் பதிலாக, சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாமல் 25,000 ரூபாய் விசேட மாதாந்தக் கொடுப்பனவாக வழங்குவதற்குக் கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இந்தக் கொடுப்பனவு இலங்கை பொறியியல் சேவை, இலங்கை கட்டடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் வழங்கப்படும்.இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவின் கையொப்பத்துடன் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதமச் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.