நாளை பாடசாலைகள் நடத்துவது குறித்த அறிவிப்பு !


நாளை (24ஆம் திகதி) பாடசாலை நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு அந்த அமைச்சு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

தமது உறுப்பினர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினமும் (25) சுகயீன விடுமுறையை அறிவித்து பணிக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என கல்வி மற்றும் கல்விசாரா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டம், வடமத்திய மாகாணம் மற்றும் வடமேல் மாகாணம் ஆகியவற்றிலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாளை அமுல்படுத்தப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 25ஆம் திகதி மேல் மாகாணத்திலும் இந்த தொழிற்சங்க நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.

தமது சேவைக்கான சேவை யாப்பை தயாரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

ஆனால் பாடசாலை நடவடிக்கைகள் நாளை(24) வழமை போன்று இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, அனைத்து ஆசிரியர்- அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களும் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.