கதிர்காமத்திற்கான காட்டுப் பாதை கிழக்கு ஆளுநரால் திறந்துவைப்பு !



( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழா உற்சவத்தையொட்டிய கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை இன்று (30) ஞாயிற்றுக்கிழமை காலை 6.30மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பூநாடா வெட்டி கானகப் பாதைக்கான கதவை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வரலாறு காணாத வகையில் இம்முறை சுமார் 4000 க்கு மேற்பட்ட அடியார்கள் முதல் தடவையாக முதல் நாளிலேயே காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்து சமய கலாசார முறைப்படி மூன்றாவது தடவையாக
கழுகுமலைப் பத்து பாடி பிரதம குரு சிவ ஸ்ரீ சீதாராம் குருக்கள் பஞ்சாரத்தி காட்டியதும் கானகப்பாதைக் கதவு திறந்து வைக்கப்பட்டது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு உகந்தை மலை முருகன் ஆலயத்தில் பிரதம குரு சிவ ஸ்ரீ க.கு. சீதாராம் குருக்கள் விசேட பூஜை நடாத்தி ஆசியுரை வழங்கினார்..

காலை 7 மணியளவில் குமண சரணாலய நுழைவாயிலில் காட்டுப் பாதை சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது.

அவ்வமயம் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம,மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் எந்திரி பி.இராசமோகன்,லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா ,மொனராகலை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் ,ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க , காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இந்து சமய செயற்பாட்டாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பல அன்பர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த சி.ஜெயராசா( ஜெயா வேல்சாமி) தலைமையிலான 56 நாள் மிகநீண்ட பாதயாத்திரை அடியார்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் அடியார்கள் கலந்து கொண்டார்கள்


  .