மட்டக்களப்பில் காணி உறுதிகளையும் ஆசிரியர் நியமனங்களையும் வழங்கினார் ஜனாதிபதி !




நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்குவதே தனது பிரதான நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அத்துடன் திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்து வரும் ‘உறுமய' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது.

இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டடத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த போது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார்.

இதன்பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

‘’திருகோணமலையை பிரதான பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்ய தீர்மானித்துள்ளோம். அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்த போது அதற்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவது குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்தப் பகுதிகளில் பாரியளவிலான விவசாய செயற்பாடுகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் அபிவிருத்தி செய்யப்படாத மகாவலி காணிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், வெருகலாறு முதல் அறுகம்பே வரையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கோட்டையை தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் சுற்றுலாத் துறைக்காக அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்தப் பிரதேசத்திற்கு ஒரு சிறந்த ஹோட்டல் கிடைக்கும்.

மேலும் இப்பகுதியில் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பொருளாதார மாற்றச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாரிய பணிகள் இங்கு செயல்படுத்தப்பட உள்ளன. இதன்படி திருகோணமலையை பிரதான ஏற்றுமதி பொருளாதா மையமாக மாற்ற முடியும்.

கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் இங்கு அமைந்துள்ளன. இப்பிரதேசத்தில் கல்வியை மேலும் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். தொழிற்கல்வித்துறையின் சீர்திருத்தத்தின் மூலம் அதிகளவான இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வாய்ப்புகளை வழங்க முடியும். மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆசிரியர்களை நியமிக்க முடியாததால், பாடசாலைக் கல்வி மேம்பாட்டிற்காக, இன்று ஆசிரியர் நியமனமும் வழங்கப்பட்டது.

நம் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் ஒரு பாரிய பிரச்சினையாக மாறிவிட்டது. அதற்கேற்ப, புதிய அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். நாங்கள் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டோம். இந்நாட்டின் சாதாரண மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு மீண்டும் அபிவிருத்தி அடையும் போது அந்த மக்களை ஒருபோதும் மறக்க மாட்டோம்.

அதன்படி மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி உரிமை வழங்கும் உறுமய திட்டத்தை நடைமுறைப்படுத்தினோம். இப்போது உங்களுக்கு ஒரு நிலத்தின் சட்டபூர்வ உரிமை உள்ளது. யாரும் அடிபணிந்து வாழத் தேவையில்லை. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு “அஸ்வெசும” நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தினோம். தற்போது விவசாயிகளுக்கு காணி உரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்பகுதிக்கு 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இந்தக் காணி உறுதிப்பத்திரங்களை வினைத்திறனாக வழங்க சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளையும் கிராமங்களுக்கு அனுப்புவதற்கான வேலைத்திட்டத்தையும் நாங்கள் தயாரித்துள்ளோம்.

அப்போது, இந்த காணி உறுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் மாவட்ட செயலகத்திற்கோ பிரதேச செயலகத்திற்கோ செல்லத் தேவையில்லை. மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர், காணி உத்தியோகத்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளுநர் ஆகியோர் கிராமத்திற்குச் சென்று காணி உறுதிகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வார்கள். எதிர்வரும் திங்கட்கிழமை அந்த வேலைத்திட்டத்தை தொடங்கி விரைவில் நிறைவு செய்ய அறிவுறுத்தியுள்ளேன். எனக்கு ஒரே ஒரு குறிக்கோள்தான் உள்ளது. அந்த உரிமையை மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். காணி உரிமையை பாதுகாக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.