பிரித்தானிய பெண்ணின் மனு விசாரணை 5 இலட்சம் ரூபா சட்டச்செலவுடன் தள்ளுபடி!


பிரித்தானிய பெண் கெய்லி பிரேசர், இலங்கை அதிகாரிகளின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை, உயர்நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா சட்டச்செலவுடன் தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கையில் இருந்து தம்மை நாடுகடத்துவதற்கு, அதிகாரிகள் எடுத்துள்ள முடிவை சவாலுக்கு உட்படுத்தி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு காலிமுகத்திடல் போராட்டத்தின்போது, சமூக ஊடகங்களில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை ஆவணப்படுத்தி வந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட கெய்லி பிரேசர் என்ற பெண்ணே இந்த மனுவை தாக்கல் செய்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தன்னிச்சையான முறையில்தம்மை நாடுகடத்தும் முடிவை ரத்து செய்ய உத்தரவிடகோரி, மனுதாரர் கோரிக்கை விடுத்திருந்தார்.

நீதியரசர் முர்து பெர்னாண்டோ தலைமையிலான மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் ஆரம்பத்திலேயே நிராகரிக்க தீர்மானித்துள்ளது.

சட்டமா அதிபர் எழுப்பிய பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

முன்னதாக மருத்துவ வீசாவில் இலங்கை வந்திருந்த பிரேசர், விசா நிபந்தனைகளை மீறியதற்காக, 2022 ஒகஸ்ட் 15க்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு குடிவரவு திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. எனினும் அவர் அதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றமும் நிராகரித்திருந்தது.