அறிவுபூர்வமான பெற்றோர், சர்வாதிகார பெற்றோர்கள், அதிபிரியம்
கொண்ட பெற்றோர்கள், புறக்கணித்து நடக்கும் பெற்றோர்கள் என நான்கு விதமான பெற்றோர் பாணி
காணப்படுகின்றது. ஒவ்வொரு பெற்றோர்களின் பாணியும் முக்கியமாக நான்கு குணாதிசயங்களால்
வேறுபடுகின்றன: அரவணைப்பு மற்றும் வளர்ப்பு, தகவல் தொடர்பு பாணி, ஒழுங்கு உத்திகள்
மற்றும் கட்டுப்பாடு மற்றும் முதிர்ச்சியின் எதிர்பார்ப்புகள். இந்த குணாதிசயங்கள்
ஒவ்வொன்றும் அவை மேற்கொள்ளப்படும் விதமும் குழந்தையின் வளர்ச்சியில் சில விளைவுகளை
ஏற்படுத்துகின்றது. நீங்கள் எந்தப் பாணியை சார்ந்தவர் என்பதையும் அதன் விளைவுகள் என்ன
என்பதையும் அறிய முழுக் கட்டுரையையும் வாசியுங்கள்.
அறிமுகம்
பிள்ளையின் ஆளுமை விருத்திக்கு பிள்ளைப் பருவத்தின் அனுபவங்கள் முக்கிய காரணிகளாக அமைகின்றன. இது தொடர்பாக ப்றொயிட்> எரிக்ஸன் போன்ற உளப்பகுப்பாய்வுக் கொள்கையியலாளர்கள்> சுயசிந்தனை கொள்கையாளர் றொஜேஸ் போன்றோர் பிள்ளைப்பருவத்து அனுபவங்களை சிறப்பாக வலியுறுத்தினர். நடத்தையியல் உளவியல் நிபுணரான ஜே.பி வற்ஸன் பிள்ளையொன்றின் மனம் பிறப்பில் ஏதும் எழுதப்படாத மற்றும் அனுபவங்களால் எழுதப்பட காத்திருக்கும் கரும்பலகை என்று கூறினார். அதனால்தான் அவர் “ஆரோக்கியமான 10 குழந்தைகளை என்னிடம் தாருங்கள்……..தெரிந்தெடுத்து பயிற்றுவித்து நான் நினைக்கும் ஒரு நிபுணனாக வரச்செய்ய என்னால் முடியும்” என்றார். அந்தவகையில் பிள்ளையின் ஆளுமை விருத்தியில் குடும்ப மற்றும் வெளிக்காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன.
பிள்ளையின் ஆரம்ப வளர்ச்சியில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்.
ஒரு பிள்ளையின் ஆரம்ப
வளர்ச்சிக் காலத்தில் பின்னிப்பிணைந்த பல காரணங்களில் குறிப்பாக பின்வரும் மூன்று முக்கிய
விடயங்கள் அதிகம் தாக்கம் செலுத்துகிறது.
1. குடும்பம்
(பெற்றோர் பாணி, குடும்ப அமைப்பு, குடும்ப பருமன், குடும்ப
முரண்பாடு)
2. சமூக கலாசார சூழல்
(பாடசாலை, சமவயது பிள்ளைகள், சமுதாயம் மற்றும் பொதுசன
ஊடகங்கள்)
3. பரம்பரை (வம்சம் அல்லது குலம்)
1.
குடும்பம்
பிள்ளையின் ஆளுமை விருத்தியில்
குடும்பம் எவ்வாறு தாக்கம் செலுத்துகிறது என்று நோக்குமிடத்து, பிறந்த குழந்தையொன்றையும்
அதன் தாயையும் அவதானியுங்கள், குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை என்பதையும், அதைப் பராமரிக்க
ஒருவர் தேவை என்பதையும், இதனால் குழந்தையின் முதல் சமூக உறவுக்கான தேவை எழுந்துள்ளது
என்பதையும் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இவ்வாறு தாயின் அல்லது பராமரிப்பாளரின் குரல்,
முகம் இரண்டையும்தான் குழந்தை முதலில் இனங்காணக் கற்றுக்கொள்கிறது. பராமரிப்பாளருக்கும்
குழந்தைக்கும் இடையே உருவாகும் பிணைப்புத்தான் பற்று (attachment) எனப்படுகின்றது. தந்தை குழந்தையுடன் இருக்கும் நேரம் குறைவு என்பதால்
வழக்கமாக, தந்தையிடம் பற்று மெதுவாகவே ஏற்படுகிறது.
பற்றின் வலிமை மாத்திரமே
திருப்திகரமான சுய விருத்தியை முழுமையாகத் தரக்கூடியது அல்ல என்று நம்பப்படுகிறது.
பதற்றமடையும் பிள்ளையொன்று பெற்றோரைப் பலமாகப் பற்றிக் கொள்ளும். ஏனெனில் பெற்றோர்கள்
மாத்திரமே பாதுகாப்பைத் தரக்கூடியவர்களாக நிற்கின்றனர். எந்த சமூக கலாசார சூழலில் பிள்ளை
வளர்கின்றதோ அது போன்றுதான் பிள்ளை உருவாகிறது. கொடுமைப்படுத்தப்பட்ட அல்லது உதாசீனம்
செய்யப்பட்ட பிள்ளைகள் கூட ஆரம்ப காலத்தில் பெற்றோரிடம் பற்றுமிக்கவர்களாகவே உள்ளனர்.
ஆனாலும் இவ்வாறு நடத்தப்படும் பிள்ளைகளுக்கு உணர்வு காயப்படுத்தப்படுவதால், இவைகள்
பிற்காலத்தில் அவர்களிடத்தில் வெளிப்படுகிறது.
இதமான பெற்றோர் பிள்ளை
உறவு இருந்தால் பிள்ளை வீட்டிலும் வெளியேயையும் சிறப்பான முறையில் இசைந்து நடக்கும்.
மேலே குறிப்பிட்ட பற்று என்பதிலிருந்து, பிள்ளையின்
வளர்ச்சிக்கு, பிள்ளை - வளர்ப்பு நடைமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்த விழிப்புணர்வு
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும். பெற்றோர்களின்
(பிள்ளை வளர்ப்பு) பாணி எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக 1983ல் மக்கோபி,
மாட்டின் ஆகியோரால் “மாதிரி பெற்றோர்கள்” உருவாக்கப்பட்டனர்.
இதனை கீழே உள்ள அட்டவனையில் விளக்குகிறது. இந்த நான்கு பெற்றோருக்குரிய பாணிகள்
சில நேரங்களில் பாம்ரிண்ட் பெற்றோருக்குரிய பாணிகள் அல்லது மக்கோபி மற்றும் மார்ட்டின்
பெற்றோருக்குரிய பாணிகள் என்று அழைக்கப்படுகின்றன.
பெற்றோரின் நடத்தை மற்றும் பாணிகளின் இரண்டு பரிமாணங்களின் அடிப்படையில் பெற்றோர் பாணிகள் வகைப்படுத்தப்படுகின்றன.
I. கோரிக்கைகள் என்பது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நடத்தையை கட்டுப்படுத்துதல் அல்லது அவர்களின் முதிர்ச்சியை வேண்டி நிற்பதைக் குறிக்கிறது.
II.
பொறுப்புணர்வு
என்பது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் உணர்ச்சி மற்றும் வளர்ச்சித் தேவைகளை ஏற்றுக்கொள்வதையும்
உணர்ந்து கொள்வதையும் குறிக்கிறது.
1.1 பெற்றோர் பாணியும் பிள்ளைகளின்
வெளிப்பாடும்
ஒவ்வொரு பெற்றோர்களின்
பாணியும் முக்கியமாக நான்கு குணாதிசயங்களால் வேறுபடுகின்றன: அரவணைப்பு மற்றும் வளர்ப்பு, தகவல் தொடர்பு பாணி, ஒழுங்கு உத்திகள் மற்றும்
கட்டுப்பாடு மற்றும் முதிர்ச்சியின் எதிர்பார்ப்புகள். இந்த குணாதிசயங்கள் ஒவ்வொன்றும்
அவை மேற்கொள்ளப்படும் விதமும் குழந்தையின் வளர்ச்சியில் விளைவுகளை ஏற்படுத்துகின்றது.
ஒவ்வாரு பாணி குறித்தும் அவற்றின் விளைவுகள் குறித்தும் இனி விரிவாக நோக்குவோம்.
I.
அறிவுபூர்வமான பெற்றோர்
அதிகாரப்பூர்வ பெற்றோர்கள்
பிள்ளைகளிடம் சாதனை, முதிர்ச்சியை அதிகம் எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் அக்கறையாகவும்
பொறுப்புணர்வுள்ளவர்களாகவும் உள்ளனர். திறந்த கலந்துரையாடல், வழிகாட்டுதல்களை வழங்குதல்
மற்றும் ஒவ்வொன்றின் பின்னணியில் உள்ள காரணங்களையும் விளக்குவதன் மூலம் விதிகளையும்,
எல்லைகளையும் அமைத்துச் செயல்படுத்துகின்றனர். தமது செயலுக்குப் பின்னால் உள்ள காரணங்களை
தங்கள் பிள்ளைகளுக்கு விளக்குவதால், இவை பிள்ளைககள் விழிப்புணர்வடையவும், விழுமியங்கள்,
ஒழுக்கங்கள் மற்றும் குறிக்கோள்களைப் பற்றி கற்றுக்கொள்ள உதவுகின்றன.
அவர்களின் ஒழுக்காற்று
முறைகள் கடுமையானவை, ஆனால் காரணமுடையவை, மாற்றத்தக்கது, பெறுபேறு சார்ந்தவை, மற்றும்
நடத்தைகளை ஒழுங்குபடுத்துகின்றது. பாசமும் ஆதரவும் உடையவர்களாக இருப்பதுடன் தங்கள்
பிள்ளைகளை சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் செயற்பட ஊக்குவிக்கிறார்கள். இவர்கள் இருவழி
தொடர்பாடலை அனுமதிக்கிறார்கள். இந்தப் பெற்றோருக்குரிய பாணி ஜனநாயக பெற்றோருக்குரிய
பாணி என்றும் அழைக்கப்படுகிறது. இவர்களின் பிள்ளைகள் நேசத்துக்குரியவர்கள்.
பாம்ரிண்ட் ஆராய்ச்சியின் அடிப்படையில், இவர்களின் பிள்ளைகள்,
மகிழ்ச்சியாகவும் பொறுப்புள்ள பெரியவர்களாகவும் வளர்கிறார்கள், சுயாதீனமாவும், அதிக
செயலாற்றலுடனும், கல்வியில் சாதிப்பதுடன், நல்ல சுயமரியாதையை வளர்த்துக் கொள்வார்கள்,
திறமையான சமூக திறன்களைப் பயன்படுத்தி நண்பர்களுடன் பழகவும், சிறந்த மன ஆரோக்கியத்தைக்
கொண்டிருப்பதுடன் - குறைந்தளவு மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை முயற்சி, குற்றச் செயல்கள்,
மதுபானம், போதைப்பொருள் பயன்பாட்டை கொண்டிருப்பர், குறைந்தளவு வன்முறை போக்கும் பாதுகாப்பான
பற்றுள்ளவர்களாகவும், சவால்களை தைரியமாய் எதிர்கொள்பவர்களுமாயிருப்பார்கள்.
II. ஆதிக்கப் பேர்வழி(சர்வாதிகார / ஒழுக்கநெறி) பெற்றோர்கள்
அதிக அளவு பெற்றோரின் கட்டுப்பாடு மற்றும் குறைந்த அளவிலான பொறுப்புணர்வு ஆகியவை சர்வாதிகார பெற்றோரின் இரண்டு பண்புகளாகும். சர்வாதிகார மற்றும் அதிகாரபூர்வமான பாணிகளுக்கிடையில் ஒற்றுமையிருந்தாலும், பெற்றோரின் நம்பிக்கை, கோரிக்கை மற்றும் அணுகுமுறையில் அவை பல முக்கியமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன.
இரண்டு பெற்றோரின் பாணிகளும்
உயர் தரத்தை கோருகையில், சர்வாதிகார பெற்றோர்கள் “நான் சொன்னால் சொன்னதுதான்” போன்ற காரணங்களைப் பயன்படுத்தி குருட்டு கீழ்ப்படிதலை எதிர்பாக்கிறார்கள்.
அவை விதிகள் மற்றும் கட்டளைகள் மூலம் ஒரு வழி தொடர்பாடலாகவே இருக்கிறது. விதிகள் பின்னால்
உள்ள காரணங்களை பிள்ளைகளுடன் கதைக்க எந்தவொரு முயற்சிக்கும் ஒருபோதும் வாய்ப்பில்லை.
பிள்ளைகளின் நடத்தையை
கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக கண்டிப்பான ஒழுக்கத்தையும் பெரும்பாலும் உடல் ரீதியான
தண்டனை போன்ற கடுமையான தண்டனையையும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஒழுங்கு முறைகள்
கட்டாயப்படுத்துதலை, அதாவது தன்னிச்சையான, முடிந்த முடிவான, ஆதிக்கம் செலுத்தும் மற்றும்
அந்தஸ்து வேறுபாட்டை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டவை. ஆகவே பிள்ளைகள் தவறு செய்யும்
போது, கற்றுக்கொடுப்பதற்குப் பதிலாக, மோசமாக உணரச் செய்யப்படுகிறார்கள். பொதுவாக
தங்கள் பிள்ளைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வளர்ப்பதில்லை. வழக்கமாக தாம் பிள்ளைகள்
மீது கொண்டிருக்கும் கண்டிப்பான அன்பினாலேயே இவ்வாறு செய்வதாக நியாயப்படுத்துகிறார்கள்.
இவர்களின் பிள்ளைகள்,
மகிழ்ச்சியற்ற ஒரு மனநிலையைக் கொண்டிருப்பர், சுதந்திரமாக செற்படமாட்டார்கள், பாதுகாப்பற்றவர்களாகத்
தோன்றுவர் குறைந்த சுயமரியாதை கொண்டவர்களாக இருப்பர். அதிக நடத்தைசார் பிரச்சனைகளை
வெளிப்படுத்துவர், கல்வியில் மோசமான அடைவை கொண்டிருப்பர், சமூகத் திறனற்றவர்களாக இருப்பர்,
அதிகளவு உளநலப் பிரச்சினைகளை எதிர்கொள்வர், அதிகளவு போதைப்பொருளுக்கு அடிமையாகலாம்,
மோசமான சமாளிக்கும் திறனை கொண்டிருப்பர்.
III.
அதிபிரியம் / அனுமதிக்கும் கொண்ட பெற்றோர்கள்
இவர்களின் பிள்ளைகள்
மிகவும் மோசமான விளைவுகளைச் சந்திப்பர்: அதாவது சட்டதிட்டங்களை மதிக்கவோ/ பின்பற்றவோ
மாட்டார்கள், சுய கட்டுப்பாடற்றவர்கள், நான் என்னும் அகங்காரம்/தன்னிலை மையப்போக்குடையவர்,
உறவுகளிலும் சமூக தொடர்புகளிலும் அதிக பிரச்சனைகளை எதிர்கொள்வர், முதிர்ச்சியின்றி,
பொறுப்புணர்வற்றவர்களாக இருப்பர். கல்வி ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாகவும்,
மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற கோளாறுகள் இவர்களுக்கு உருவாகக்கூடும்.
IV.
புறக்கணித்து நடக்கும் /ஈடுபாடற்ற பெற்றோர்கள்
மனச்சோர்வு,
அல்லது உடல் ரீதியான துஷ்பிரயோகம் அல்லது அவர்கள் பிள்ளைகளாக இருக்கும் போது புறக்கணிப்புக்குட்பட்டிருத்தல்
போன்ற உளநலப் பிரச்சினைகள் இந்தப் பெற்றோர்களுக்கு இருக்கலாம். இவர்கள் ஏதோவொரு விடயத்திற்கு
அடிமையாகி இருப்பவர்களாகவோ, அதிக நேரத்தை வேலையில் செலவிட வேண்டிய நபர்களாகவோ மற்றும்
வேறு எதையும் பற்றி கவலைப்பட விடாத கடுமையான நோய் உள்ளவர்களாவோ இருக்கலாம்.
புறக்கணித்து
நடக்கும்பெற்றோர்களால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள்: அதிக மனக்கிளர்ச்சி உடையவர்களாக, உணர்ச்சியை
சுயமாக கட்டுப்படுத்த முடியாதவர்களாக, நிலையான மனநிலையற்றவர்களாக, முறை(நடத்தை)தவறக்
கூடியவர்களாக, அதிக குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களாகவும் போதைவஸ்துக்கு அடிமையாகக் கூடியவர்களாகவும் இருப்பர். மேலும் அதிக
உளநலப் பிரச்சினைகளையும் கொண்டிருப்பர் - உதாரணமாக. விடலைப் பருவத்தில் தற்கொலை செய்து
கொள்வர்.
உங்கள் அனுபவத்தில்
சிலரை அவதானித்துப் பாருங்கள். தேவையற்ற விடயங்களுக்கு ஆத்திரப்படுல், உணர்ச்சிகளை
அடக்கமுடியாதிருத்தல், இடம், காலம் அறிந்து செயற்படாமல் மற்றவர் முன் அனாகரிகமாக நடந்து
கொள்ளுதல், வயதிற்கு எற்ப முதிர்ச்சியற்ற செயற்பாடு, தனித்துவமின்றி, நிலையற்ற மனநிலையுடன்,
நேரத்திற்கு நேரம் மாறுபட்ட நடத்தையைக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் சிறுவயதில்
பெற்றோரை இழந்த, புறக்கணிக்கப்பட்ட உணர்வுடன் வளந்த ஒருவராக இருப்பர். எனவே இவர்களுடைய
தற்போதைய ஆளுமை விருத்தி பிள்ளைப்பருவத்தில் அவர்கள் எதிர்கொன்ட அனுபவத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து பிள்ளைகளின் ஆளுமை விருத்தி பெற்றோரின் பாணியினால் தீர்மானிக்கப்படுவதை
அவதானிக்கலாம்.
எந்த பெற்றோருக்குரிய பாணி மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்?
மேலே உள்ள
மாதிரிகளில் சில தீவிர அசாதரண வகையான பெற்றோர்களின் பாணியானது அப்படியே 100% இருக்காது
என்பதுடன் விதிவிலக்கான விடயங்கள் இருக்க முடியும். இந்த நான்கு வகைகளுக்கும் இடைப்பட்ட
பல வகை பாணிகளை உருவாக்க முடியும். பல தசாப்த கால ஆய்வுகளிலிருந்து, அறிவுபூர்வமான
பெற்றோருக்குரிய பாணியானது பிள்ளைகளில் சிறந்த பெறுபேற்றை உருவாக்குவதில் ஒருங்கிசைவைக்
கொண்டுள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உளவியலாளர்கள் மற்றும் மனநல மருத்துவர்களால் அதிகாரப்பூர்வ பெற்றோர்கள் பாணி
சிறந்த பெற்றோருக்குரிய பாணியாகக் கருதப்படுகிறது.
எனவே நல்ல
பெற்றோருக்குரிய திறன்களை வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் முதலில் தாம் எந்த நிலையில்
இருக்கிறார்கள் என்பதை அடையாளம் காண வேண்டும். பின்னர் அறிவுபூர்வமான பெற்றோருக்குரிய
மாதிரியுடன் நெருக்கமாகவும் இசைவாகவும் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இதன்மூலம்
அவர்களின் பிள்ளைகளுடன் ஒரு நல்ல உறவும், அவர்களின் நல்வாழ்வும் நடைமுறையில் உத்தரவாதப்படுத்தப்படும்.
விளைவுகளை
பாதிக்கக்கூடிய மற்றொரு கூறு, பெற்றோருக்குரிய பாணி மற்றும் பெற்றோருக்குரிய நடைமுறைகளுக்கு
இடையிலான வேறுபாடு ஆகும். பெற்றோர் பாணி என்பது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்க்கும்
உணர்வுபூர்மான சூழல் மற்றும் கட்டுப்பாடு ஆகும். பெற்றோருக்குரிய நடைமுறைகள் என்பது
பெற்றோர்கள் தாங்கள் பெற்றோராக செயற்பட பாவிக்கும் குறிப்பிட்ட செயல்களைக் குறிக்கிறது.
ஒரு குறிப்பிட்ட பெற்றோருக்குரிய பாணியைக் கொண்ட பெற்றோர்கள் கூட, வெவ்வேறு பெற்றோருக்குரிய
நடைமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் விளைவுகளின் அளவை மாற்றலாம்
மோகன், கோர்
(1987) நிணர்களின் கருத்துப்படி பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுடன் செலவிடும் நேரத்தின்
பெறுமதியை வீட்டில் முழுநேரமும் பிள்ளைகளுடன் இருக்கும் தாய்மார்களை விட வேலைக்குச்
செல்லும் தாய்மார்களின் பிள்ளைகளே அதிகம் உணர்வதாக குறிப்பிடுகின்றனர். மேலும் இவர்களின்
கருத்துப்படி பெற்றோர்கள் 10 விடயங்களை செய்வதன் மூலம் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு, விருத்திக்கு
பங்காற்ற முடியும் என்கின்றனர். அவையாவன.
1.
அன்பை செயலில்
காட்டுதல்
2.
ஆற்றலை அங்கிகரித்துப்
பாராட்டுதல்
3.
போசாக்குத் தேவையைப்
பூர்த்தி செய்தல்
4.
ஆடைகளை வழங்குதல்
5.
பொழுது போக்கில்
ஈடுபடுத்தல்
6.
உடல்/சுகாதார தேவைகள்
பூர்த்தி செய்தல்
7.
கற்றல் செயற்பாடுகள்
வழங்குதல்
8.
சமூக குழு இடைத்தாக்கம்
புரிய உதவுதல்
9.
நிதி தேவைகளை பூர்த்தி
செய்தல்
10. பருவமடைவதற்கு தயார் படுத்தல்
ஆகவே நீங்கள் எந்த வகைப் பெற்றோர் என்பதை நிதானித்து
அறிவுபூர்வமான பெற்றோருக்குரிய பாணியை வளர்ப்பதற்கு முயற்சியுங்கள். மேலும் பின்வரும் குடும்ப காரணங்களும் பிள்ளையின் ஆளுமை விருத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன.
1.2 குடும்ப அமைப்பு
குடும்ப அமைப்பு
பிள்ளையின் ஆளுமை விதித்தியில் தாக்கம் செலுத்துகின்றது. பிள்ளையொன்று தன்னுடைய சமூகப்
பங்கு என்னவென்று குடும்பத்தினுள்ளேதான் கற்றுக்கொள்கிறது. எனவே ஒரு குடும்பத்தில்
பிள்ளை ஒன்று இடைத்தாக்கம் புரியும் உறுப்பினர்கள் மிக முக்கியமானவர்கள்.
தனிக் (கரு)
குடும்பங்களைப் பொறுத்தவரையில் குடும்பங்கள் சீர்குலைந்து போதல் அதிகரித்துச் செல்வதால்,
தாய் அல்லது தந்தை மாத்திரம் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரண்டு
பெற்றோரும் உள்ள குடும்பங்களில்கூட வீட்டு வேலைகளை தாய்மார் அதிகம் செய்யாதிருக்கலாம்.
அவர் வெளியில் வேலைக்குச் செல்லக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுக்கு
பெற்றோரின் கவனிப்பு அதிகளவு கிடைக்காமற் போகலாம்.
கூட்டுக் குடும்பம்/விரிவான குடும்பங்களும் அதிகளவு
மாற்றமடைந்து வருகின்றன. இதன் விளைவாக பாட்டன், பாட்டி, மாமா, மாமி ஆகியோர் இணைந்த
குடும்பங்களைக் காண்பது அரிதாகிவிட்டது. சந்தர்ப்பங்களைப் பொறுத்து இவ்வாறான மாற்றங்கள்
எதிர்விளைவு தரக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். கூட்டுக் குடும்ப உறுப்பினர்கள் பெற்றோருக்குப்
பதிலாக சில சந்தர்ப்பங்களில் பிள்ளைகளை கவனித்துக் கொண்டாலும் சில நேரம் அதிக உறுப்பினர்கள்
பிள்ளையை கட்டுப்படுத்துவதால் பிள்ளைக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது.
எனவே குடும்பத்தின்
தன்மை மாறிக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் பெற்றோர் பாணி மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்ததாகின்றது.
1.3 குடும்பத்தின் பருமன்
குடும்பத்தின்
பருமன் பிள்ளையின் ஆளுமை விதித்தியில் தாக்கம் செலுத்துகின்றது. தனிப்பட்ட பிள்ளைகளுடன்
செலவழிக்க பெற்றோருக்கு குறைந்தளவு நேரமே இருப்பதால், சிறிய குடும்பங்களைச் சேர்ந்த
பிள்ளைகளுடன் ஒப்பிடும்போது பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் வாசிப்பு, வாய்மொழித்
திறன், ஆக்கத்திறன் போன்றவற்றில் குறைவான செயல்திறனையே கொண்டிருக்கின்றனர்.
1.4 குடும்பத்தில் முரண்பாடு
மேலும் குடும்பத்தில்
முரண்பாடும் பிள்ளையின் ஆளுமை விதித்தியில் தாக்கம் செலுத்துகின்றது. பெற்றோர்களுக்கிடையில்
ஒற்றுமையின்மையால் பிள்ளை மன அழுத்தத்திற்குள்ளாகலாம். வாய் தர்க்கம், உடல் ரீதியான
வன்முறை, மது பழக்கம் போன்றன பிள்ளையின் வளர்ச்சியின் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வீட்டில் உள்ள கவலைகளால் பிள்ளைகள் தனியாக ஒதுங்கி வாழலாம் அல்லது முழு உலகத்தின் மீதும்
வெறுப்போ அல்லது பகையுணர்வோ ஏற்படலாம். இப்படிப்பட்ட பிள்ளைகள்தான் சமூகத்தில் காரணமில்லாமல்
பிறருக்கு துன்புறுத்தல்களை அல்லது தொடர் கொலைகளைக்கூட செய்பவர்களாக உருவாகலாம்.
எனவே மேலே
கூறப்பட்ட விடங்களிலிருந்து பிள்ளையின் ஆளுமை விருத்தியில் குடும்பம் எவ்வாறு தாக்கம்
செலுத்துகிறது என்பது அவதானிக்கப்பட்டது. குறிப்பாக பெற்றோர்களின் பாணி எவ்வாறு பிள்ளைகளின்
பிற்கால நடத்தையில் தாக்கம் செலுத்துகின்றது என்பதை அவதானித்தோம். அடுத்த தொடரில் சமூக,
கலாசாரக் காரணிகள் மற்றும் பரம்பரை எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை பார்க்கலாம்.
இந்தக் கட்டுரை மற்றவருக்கும் பயன்படும் என நினைத்தால் நண்பர்கள், உறவினர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்.
Written
By :
N.
Sabesan,
Specialist
- Education in Emergencies, Master of Business administration, Master of Arts
in Sociology, Professional Master’s Degree - Leadership Development, Bachelor
of special degree in Economic, High Diploma in Youth in Development works.