விஹாரை அறையில் தேரருடன் காணப்பட்ட தாயையும் மகளையும் தாக்கிய எண்மருக்கு விளக்கமறியல்!

நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்திலுள்ள விஹாரை ஒன்றின் அறையில் பௌத்த தேரருடன் காணப்பட்டதாகக் கூறப்படும் யுவதி மற்றும் அவரது தாய் ஆகியோரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில் நீதிவான் ஹேமந்த வெத்தசிங்க நேற்று சனிக்கிழமை (08) உத்தரவிட்டார்.

சந்தேக நபர்கள் 8 பேரையும் அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாடு செய்தவருக்கு எதிராக முறைப்பாடு செய்ய தமது தரப்பு விரும்புவதாக நீதிவானிடம் கேட்டனர்.

குறித்த முறைப்பாடுகளை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நவகமுவ, பொமிரிய ராஸ்ஸபான பிரதேசத்தில் வீடு ஒன்றின் அறையில்  பௌத்த தேரருடன்  இளம் பெண்ணும் தாயும் இருந்தபோது பலவந்தமாக அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள், தாய், மகள் இருவரையும் தாக்கிய குற்றச்சாட்டில்  நவகமுவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.