வயிற்றில் 3 சிசுக்களுடன் உயிரிழந்த கர்ப்பிணித் தாய் !

3 குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் கர்ப்பிணித் தாய் ஒருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை பேறு இன்மையால், பரிசோதனைக் குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தப்பட்டு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

திருமணமாகி 8 வருடங்கள் கழித்து குழந்தை இல்லாததால் கர்ப்பமாகி குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையிலேயே இவ்வாறு முயற்சி செய்தததாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கணவர் மேலும் கூறுகையில்,

குழந்தை கருத்தரித்ததால், நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் விசேட வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய கடந்த 28 ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் 23 வாரங்கள் கருவுற்றிருந்தார். கடந்த 29 ஆம் திகதி இரவு அவர் சிரமப்பட்டார்.

30 ஆம் திகதி காலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இரண்டாவது நாள் மதியம், மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வைத்தியசாலையின் அலட்சியத்தால் இந்த துயர சம்பவம் நடந்துள்ளதாகவும், இது தொடர்பில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவரான அமில சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான 36 வயதான லவந்தி சதுரி ஜயசூரிய என்ற கர்ப்பிணித் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தாய் மற்றும் மூன்று  சிசுக்களின் இறுதிச் சடங்குகள் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றன.

இது தொடர்பில் ராகம போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ரணவீர கருத்து தெரிவிக்கையில்,

கருவில் இருந்த சிசுக்களும் தாயும் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலையின் தவறு என்று கூறமுடியாது.

உயிரிழந்த பெண்ணுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில், பரிசோதனைக் குழாய் மூலம் பிரசவத்திற்காக கருப்பையில் கருமுட்டை பொருத்தி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சிகிச்சைகள் அரச வைத்தியசாலைகளில் செய்யப்படுவதில்லை. இவற்றை தனியார் வைத்தியசாலைகளில் பல இலட்சம் ரூபா செலவழித்து செய்யப்படுகின்றன.

இதன்போது பல கருமுட்டைகளை பொருத்துகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு முட்டையாவது நன்றாக வளரும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்யப்படுகிறது.

எனினும், இந்த தாய்க்கு மூன்று முட்டைகளும் கருவுற்றிருந்தது. எவ்வாறாயினும், சுமார் இருபது வாரங்களில், அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டு ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த தாயையும் அவரது  சிசுக்களையும் காப்பாற்ற வைத்தியசாலையின் ஊழியர்கள் கடுமையாக பாடுபட்டனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.