இரு குழுக்களுக்கிடையில் மோதல் ; 26 பேர் கைது!


கொழும்பு, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் உள்ள வீடொன்று தொடர்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சந்தேக நபர்கள் வெள்ளிக்கிழமை (7) குருந்துவத்தை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு 7, பார்ன்ஸ் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் பிற்பகல் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக குருந்துவத்தை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதற்கமைய, பொலிஸார் அவ்விடத்துக்குச் சென்றபோது இரு தரப்பினருக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் உள்ள குறித்த வீட்டை இரு தரப்பினரும் சொந்தமாக்க முயற்சித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த வீடு இருவருக்கும் சொந்தமில்லாததால் அதனை சொந்தமாக்கிக் கொள்வதற்காக பல சந்தர்ப்பங்களில் தகராறு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இச்சம்பவத்துடன் தொடர்புடைய 26 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.