நள்ளிரவில் சிவில் உடையில் வீடு புகுந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கத்தி வெட்டு

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொம்மாதுறையிலுள்ள வீடொன்றுக்குள் சிவிலுடையில் நள்ளிரவில் புகுந்து தப்பியோட முற்பட்டபோது கத்தி வெட்டுக்குள்ளாகியதில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


புதன்கிழமை (24) நள்ளிரவு 11.30க்கு இடம்பெற்ற இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
மேற்படி கொம்மாறையிலுள்ள வீடொன்றுக்குள் யாரோ உள் நுழைந்திருப்பது பற்றி அரவம் கேட்டதும் வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டுள்ளனர். அப்பொழுது வீட்டுக்குள் நுழைந்திருந்த நபர், தப்பியோட முற்பட்டுள்ளார். அவரைத் துரத்திச் சென்று கத்தியால் தாக்கியபொழுது காலில் பலத்த வெட்டுக் காயமேற்பட்டுள்ளது.
கிராமத்தவர்கள், காயத்துக்குள்ளானவரை மடக்கிப் பிடித்த பின்னர்தான் அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் என்று தெரியவந்துள்ளது.

 உடனடியாக ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டார்.

மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள், குறித்த வீட்டுக்கு அந்த வேளையில் ஏன் சிவிலுடையில் சென்றார் என்பது குறித்தும் தாக்குதல் இடம்பெற்றது குறித்தும் பொலிஸார் விசாரiணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.